Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்சார ரெயில்களில் போலி அடையாள அட்டையுடன் பயணித்த 2 ஆயிரம் பேர் பிடிபட்டனர்

ஜுன் 05, 2021 01:51

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மின்சார ரெயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசு, மாநகராட்சி, ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் பலர் போலி அடையாள அட்டைகளுடன் பயணிப்பதாக புகார் வந்தது.
 
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் போலி அடையாள அட்டையுடன் பயணித்த 2 ஆயிரத்து 18 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தவிர கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஓசிப்பயணம் மேற்கொண்டதாக மும்பை மற்றும் புறநகர் ரெயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.9 கோடியே 50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில் 54 ஆயிரம் பயணிகள் மே மாதத்தில் பிடிபட்டு உள்ளதாகவும், இவர்களிடம் ரூ.3 கோடியே 33 லட்சம் வரையில் அபாராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மாதம் 17-ந் தேதி முதல் கடந்த மாதம் 2-ந் தேதி வரை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய பரிசோதனையில் 1,269 பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ததாக பிடிபட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே சீனியர் மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் தெரிவிக்கையில், மாநில அரசு அறிவித்து உள்ள சட்டவிதிகளின் படி அத்தியாவசிய பணி ஊழியர்கள் மட்டும் ரெயிலில் பயணம் செய்யும்படியும், பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தலைப்புச்செய்திகள்